பேரையூர் : பேரையூர்- ஆண்டிபட்டி இடையே சேதமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேரையூர்- ஆண்டிபட்டி செல்லக்கூடிய சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியாக கிடக்கிறது. பேரையூர்- டி.கல்லுப்பட்டி மெயின் சாலையில் பிரிந்து ஆண்டிபட்டி செல்லக்கூடிய இந்த சாலை மெட்டல் போடப்பட்டதோடு இதுவரை சரிசெய்யப்பட வில்லை.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இச்சாலை குண்டும், குழியுமாக கிடப்பதால் இரவுநேரங்களில் ஆட்டோ, டூவீலர், சைக்கிள்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருவது வாடிக்கையாகி வருகிறது. சிலர் விழுந்து படுகாயங்களும் அடைந்து இருக்கிறார்கள். இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர்.